உள்நாட்டு செய்திகள்
உயர்தரப் பரீட்சை காரணமாக, இன்று நள்ளிரவு முதல் மேலதிக வகுப்புக்களுக்குத் தடை !

2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் “டித்வா புயல்” காரணமாக இறுதியில் சில பாடங்களுக்கான பரீட்சைகள் இடம்பெறாது பிற்போடப்பட்டது, அதனடிப்படையில் குறித்த எஞ்சிய பாடங்களுக்கான பரீட்சையினை எதிர்வரும் ஜனவரி 12 முதல் ஜனவரி 20 வரை நாடு முழுவதும் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவரும் இந்த நேரத்தில், மேலதிக வகுப்புக்கள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவதற்கு இன்று நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படுவதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலதிக வகுப்புக்கள் மற்றும் கருத்தரங்குகள், பரீட்சை நடைபெறவுள்ள பாடங்கள் தொடர்பான விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளை நடத்துதல்,
வினாத்தாள் விநியோகம், பரீட்சையில் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படும் வினாக்களை உள்ளடக்கிய மாதிரி வினாத்தாள்களை அச்சிடுதல் மற்றும் விநியோகித்தல்,
பிரசார நடவடிக்கைகள், பரீட்சை வினாக்களுக்கு நிகரான வினாக்களை வழங்குவதாகக் கூறி சுவரொட்டிகள், பதாகைகள், துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தல் அல்லது இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் வாயிலாக விளம்பரப்படுத்துதல் போன்றவற்றிற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவுகளை மீறிச் செயற்படும் நபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு எதிராகப் பரீட்சைகள் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைத் திணைக்களம் எச்சரித்துள்ளது.




