கடற்றொழிலாளர் ஒருவரை சிகிச்சைக்காகக் கரைக்குக் கொண்டுவர கடற்படை உதவி

தெற்கு கடற்பரப்பிற்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் விபத்துக்குள்ளான பலநாள் மீன்பிடிப்படகிலிருந்து கடற்றொழிலாளரொருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
கடந்த 5 ஆம் திகதி ஆறு கடற்றொழிலாளர்களுடன் கடற்றொழில் நடவடிக்கைக்கு சென்றிருந்த போது தெற்கு கடற்பரப்பின் 730 கடல் மைல் தொலைவில் வைத்து குறித்த கடற்றொழிலாளர் விபத்துக்குள்ளாகியுள்ளார்.
இந்நிலையிலேயே விபத்துக்குள்ளான கடற்றொழிலாளரை கடற்கரைக்கு அழைத்து வர கடற்படை உதவியுள்ளது.
அதன்படி காயமடைந்த மீனவரைக் கடற்படைக் கப்பலுக்குக் கொண்டு சென்ற பின்னர் கடற்படையினர் அவருக்கு அடிப்படை முதலுதவி அளித்து காலி தேசிய மருத்துவமனைக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக அனுப்பபி வைத்துள்ளனர்.
மேலும் கொழும்பு கடற்படைத் தளத்தில் அமைந்துள்ள கடல் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்பின் மூலம் இலங்கை கடல் தேடல் மற்றும் மீட்பு வலயத்திற்குள் இடர்ப்பாட்டில் உள்ள கடல்சார் மற்றும் மீனவ சமூகத்தினருக்கு நிவாரணம் வழங்குவதற்காக கடற்படை தொடர்ந்து தயார் நிலையில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.




