இலங்கை அணி தோல்வி, அரசு தலையிட வேண்டும் அணித்தலைவர் கோரிக்கை !

இருபதுக்கு 20 உலகக்கிண்ணத் தொடரிலிருந்து இலங்கை அணி வெளியேறியதைத் தொடர்ந்து
இலங்கைத் தேசிய கிரிக்கெட் அணியைச் சுற்றி நிலவும் எதிர்மறையான விமர்சனங்கள் மற்றும்
சமூக வலைதளத் தாக்குதல்கள், வீரர்களின் மனநலத்தையும் விளையாட்டின் எதிர்காலத்தையும்
பாதிப்பதாகத் தெரிவித்துள்ள அணியின் தலைவர் தசுன் ஷானக, இதில் அரசாங்கம் தலையிட
வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
தோல்விக்கான பொறுப்பை அணி ஏற்றுக்கொண்டாலும், வெளியிலிருந்து
வரும் தொடர்ச்சியான எதிர்மறை விமர்சனங்கள் ஆரோக்கியமற்ற சூழலை உருவாக்கியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
அணிக்குள் நேர்மறையான எண்ணங்களுடன் இருக்க முயற்சி செய்தாலும், பொதுவெளியில் பரப்பப்படும்
விமர்சனங்களைக் கட்டுப்படுத்துவது வீரர்களுக்கு கடினமாக இருப்பதாக அவர் வருத்தம் தெரிவித்தார்.
குறிப்பாக, உலகக்கிண்ணத் தோல்விக்கான காரணங்களை அணி நிர்வாகம் அறிந்திருப்பதாகவும்,
ஆனால் குறைகளை நிவர்த்தி செய்வதை விட எதிர்மறையான கருத்துக்களே அதிகம் பரப்பப்படுவதாகவும்
அவர் சுட்டிக்காட்டினார். எனவே, வளர்ந்து வரும் இளம் வீரர்களின் மனநலத்தைப் பாதுகாக்கவும்,
இத்தகைய எதிர்மறைச் சூழலைத் தடுக்கவும் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என
அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.




