உள்நாட்டு செய்திகள்

சுரேஷ் சலே சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் – கம்மன்பில வெளிப்படுத்திய விடயம்

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அரச புலனாய்வுத் துறைத் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மேற்கொண்டுள்ள சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் அவர் எதிர்நோக்கும் அமானுஷ்ய சித்திரவதைகள் குறித்து, பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் சட்டத்தரணி உதய கம்மன்பில இன்றைய தினம் எதுல்கோட்டேயிலுள்ள கட்சித் தலைமையகத்தில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார்.

சுரேஷ் சலே நீதிமன்ற உத்தரவின்றி, ஜனாதிபதியின் தனிப்பட்ட உத்தரவின் பேரில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பயன்படுத்தி பழிவாங்கலாகக் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும், இக்கைதுக்கு எதிரான வழக்கு தற்போது நீதிமன்றில் நிலுவையில் உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

சிஐடி காவலில் தமக்கு இழைக்கப்படும் அநாகரிகமான, அமானுஷ்ய சித்திரவதைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நேற்று இரவு முதல் சுரேஷ் சலே உணவு, நீர் மற்றும் மருந்துகளை முற்றாக மறுத்து இந்த அபாயகரமான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக கம்மன்பில தெரிவித்தார்.

நேற்று இரவு அவருக்கு ஒரு கரண்டி சோறும் முள்ளங்கி சொதியும் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளதுடன், அதுவும் ஒரு பழைய பத்திரிகைத் தாளில் வைத்து வழங்கப்பட்டதால், உணவு நிலத்தில் கொட்டியுள்ளது.

இதனால் மனதளவில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள அவர், “தன்னை நாயை விட மோசமாக நடத்துகிறார்கள்” என இன்று காலை தன்னைத் தேடிவந்த மகனிடம் அழுது புலம்பியுள்ளதாக கம்மன்பில விபரித்தார்.

கொழும்பு நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட தேசிய தடயவியல் மருத்துவ அறிக்கையின் விபரங்களை வெளியிட்ட கம்மன்பில, சலே கைது செய்யப்பட்டு 7 நாட்களின் பின், ஏனைய 13 கைதிகள் முன்னிலையில் அவரது ஆடைகள் அனைத்தும் களையப்பட்டு, கைவிலங்கிடப்பட்டு, குனிந்து நிற்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டு, அவரது மலக்குடல் பகுதி ஒரு அதிகாரியால் தொட்டு சோதனையிடப்பட்டு பாலியல் மற்றும் உடல் ரீதியான கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என்று பகிரங்கப்படுத்தினார். மேலும், அவர் 6×4 அடி அளவுள்ள மிகச்சிறிய அறையில் அடைக்கப்பட்டு, 40 நாட்கள் வெறும் தரையிலேயே தூங்க வைக்கப்பட்டுள்ளார்.

அவரது முகத்திற்கு நேரே 24 மணித்தியாலங்களும் பிரகாசமான மின்விளக்கு ஒளிரவிடப்படுவதால் அவரால் தூங்க முடியாமல் அவதிப்படுவதுடன், கடுமையான புரத மற்றும் வைட்டமின் (D, B12) குறைபாடுகளாலும் அவர் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.

“உயிர்த்த ஞாயிறு தாக்குதலை இராணுவத்தினரே நடத்தினர்” என்ற பொய் பிரசாரத்தை செய்ய முற்பட்டு, அதனை நிரூபிக்க முடியாத தற்போதைய திசைகாட்டி அரசாங்கம், சுரேஷ் சலேவை தற்கொலைக்கு தூண்டி, அனைத்து இரகசியங்களையும் அவருடன் புதைத்துவிட்டு தப்பிக்க முயல்கிறது என கம்மன்பில குற்றம் சாட்டினார்.

சலேக்கு தற்கொலை செய்துகொள்ளும் அபாயம் அதிகம் உள்ளதாக ஏப்ரல் 29 அன்றே மருத்துவர்கள் எச்சரித்திருந்தும், அரசு வேண்டுமென்றே அவரை சித்திரவதைக்கூடத்திலேயே வைத்துள்ளதாக அவர் கூறினார்.

எனவே, நாட்டின் அமைதிக்காகப் பாடுபட்ட, சர்வதேச பயங்கரவாத எதிர்ப்பு நிபுணர் ரொஹான் குணரத்னவினால் பாராட்டப்பட்ட ஒரு சிறந்த இராணுவ வீரரான சுரேஷ் சலேவை மரணத்தில் இருந்து காப்பாற்ற, ஒட்டுமொத்த நாட்டு மக்களும் தங்களின் இருதய சாட்சியின் படி சமூக ஊடகங்கள் வாயிலாக உடனடியாக குரல் கொடுக்க வேண்டும் என உதய கம்மன்பில இந்த ஊடக சந்திப்பில் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button