முச்சக்கரவண்டி மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் பாடசாலை மாணவன் உள்ளிட்ட மூவர் மரணம்

நாவலப்பிட்டிய, மாப்பாகந்த பகுதியிலிருந்து நாவலப்பிட்டிய நோக்கி பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டி மீது பிரதான வீதிக்கு அருகில் இருந்த பெரிய மரமொன்று முறிந்து விழுந்ததில், பாடசாலை மாணவன் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.
இன்று (04) காலை 6:45 மணியளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளதுடன், இதில் ஒரு பாடசாலை மாணவன், அவரது தாய் மற்றும் மற்றொரு பெண் ஆகியோரே உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், இந்த விபத்திலிருந்து முச்சக்கரவண்டியின் சாரதி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.
விபத்து நடந்ததைத் தொடர்ந்து, நாவலப்பிட்டிய பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து மரத்திற்குள் சிக்குண்டிருந்த மூவரின் சடலங்களையும் மீட்டு, நாவலப்பிட்டிய மாவட்ட பொது வைத்தியசாலைக்குக் கொண்டு சேர்த்துள்ளனர்.
நெடுங்காலமாக மக்கிப்போயிருந்த அந்த யூக்கலிப்டஸ் மரத்தை வெட்டி அகற்றுமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்குப் பலமுறை அறிவித்தும், அதற்கு இதுவரை எவ்வித தீர்வும் வழங்கப்படாததாலேயே இந்த விபத்து நேரிட்டுள்ளதாகப் பிரதேசவாசிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
விபத்துத் தொடர்பாக நாவலப்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




