உள்நாட்டு செய்திகள்

மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்ல வேண்டாம்

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளில் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்த சிவப்பு எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடலோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதுடன், அந்த கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, மறுஅறிவித்தல் வரை இந்த கடற்பகுதிகளுக்குள் செல்ல வேண்டாம் என கடற்சார் மற்றும் மீனவ சமூகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேநேரம் திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவு ஊடாக காங்கேசன்துறை வரையும், கற்பிட்டியிலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையுமான கடலோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதுடன், அந்த கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.

மன்னாரிலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடலோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் கடல் அலைகளின் உயரம் சுமார் 2.0 முதல் 2.5 மீற்றர் வரை உயரக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்வரும் அறிவித்தல்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு மீனவ மற்றும் கடற்சார் சமூகத்தினருக்கு மேலும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button