இந்தியாவில் தனியார் மருத்துவமனைகளில் சிசேரியன் பிரசவங்கள் அதிகரிப்பு

இந்தியா முழுவதும் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிசேரியன் பிரசவங்கள் சாதாரணமான ஒரு விடயமாக மாறியுள்ளன.
கடந்த 2023-24 ஆம் ஆண்டு காலப்பகுதியில், தனியார் மருத்துவமனைகளில் இடம்பெற்ற பிரசவங்களில் 54% சிசேரியன் முறையிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளதாகஇந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
2023-24 ஆம் ஆண்டுக்கான தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின் தரவுகளிலேயே இந்த விபரங்கள் வெளியாகியுள்ளன.
மாநிலங்களின் அடிப்படையில் நோக்குகையில், மேற்கு வங்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிசேரியன் பிரசவங்கள் 87.7% ஆகவும், தெலுங்கானாவில் 84% ஆகவும், ஆந்திரப் பிரதேசத்தில் 66% ஆகவும் பதிவாகியுள்ளன.
அத்துடன், அரச மற்றும் தனியார் மருத்துவமனைகள் அனைத்தையும் உள்ளடக்கிய ஒட்டுமொத்த பிரசவங்களின் அடிப்படையில், தெலுங்கானாவில் 62 வீதத்திற்கும் அதிகமான பிரசவங்களும், ஆந்திரப் பிரதேசத்தில் 52 வீதத்திற்கும் அதிகமான பிரசவங்களும் சிசேரியன் மூலம் நிகழ்ந்துள்ளன. அதேநேரம் மேற்கு வங்கத்தில் இந்த வீதம் 44.5% ஆகக் காணப்பட்டது.
இதேவேளை இந்தியாவின் 27 மாநிலங்கள் மற்றும் டெல்லி, ஜம்மு-காஷ்மீர் ஆகிய இரண்டு பெரிய யூனியன் பிரதேசங்கள் உட்பட 18 மாநிலங்களில், தனியார் மருத்துவமனைகளில் இடம்பெறும் பிரசவங்களில் பாதியளவுக்கும் அதிகமானவை சிசேரியன் முறையிலேயே மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது




