வடக்கு மாகாணத்தில் கன மழைக்கு எதிர்பார்ப்பு !!

வங்காள விரிகுடாவில் திருகோணமலைக்கு கிழக்காக 80 கி.மீ. தொலைவில் காணப்படும் ஆழ்ந்த காற்றழுத்ததாழ்வு மண்டலம் தொடர்ச்சியாக வடக்கு நோக்கி நகர்ந்து வருகின்றது என யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் புவியியல்துறைத் தலைவர் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்,
இதனால் தற்போது வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் கிடைத்து வரும் தூறல் மற்றும் மிதமான மழை நேற்று (09) இரவு முதல் படிப்படியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இன்று (10) காலை வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது, தற்போது வடக்கு மாகாணத்தின் கரையோரப் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 40 கி.மீ. என்ற அளவில் உள்ளது. அதேவேளை உள்நிலப் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 30 கி.மீ. என்ற அளவில் உள்ளது. இது படிப்படியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு மாகாணத்தின் பல இடங்களிலும் கடல் மிக கொந்தளிப்பான நிலையில் காணப்படுவதனால் சில இடங்களில் கடல்நீர் உள்வரும் செயற்பாடும் அவதானிக்கப்பட்டுள்ளது. இந்தநிலை இன்று மாலை வரை நீடிக்கும்எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.




